Tuesday, 20 January 2015

இன்றைய இராகம் சிந்து பைரவி:

சிந்து பைரவி நாடகப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். இது ஹிந்துஸ்தானி இராகமான பைரவி   என்ற இராகத்திலிருந்து வந்தது. பைரவியில்எல்லா ஸ்வரங்களும்  சுத்த ஸ்வரங்களாக இருந்தால் அது சிந்து பைரவி ஆகிறது. சிலர் இதை மிஸ்ர பைரவி என்றும் கூறுவர். சிந்து பைரவி இராகத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற ஒருவர் எந்த இராகத்தையும் சுலபமாக பாடலாம்.

பாடுவதற்கேற்ற  நேரம் : காலை முன் ஜாமம், மற்றும் இரண்டாம் ஜாமம்.

பாடுவதற்கேற்ற மன நிலைகள்: வீர ரசம், உண்மையான கோபம், மற்றும் அனைத்து வகையான உணர்ச்சிகளும்.

இன்று நாம் இதில் திருவாளர்கள் விஸ்வநாதன்-ராமமுர்த்தி, திரு கே வி மகாதேவன் அவர்களின் இசையமைப்பில் வெளி வந்த இரண்டு பாடல்களைப் பாப்போம்.

முதல் பாடல் - பாலும் பழமும் படத்திலிருந்து "என்னை யாரென்று எண்ணி எண்ணி" - மெல்லிசை  மன்னர்களின் இசையில் உருவான பாடல். கண்ணை இழந்த ஒருவர் தனது மனைவியின் பிரிவாற்றாமையால் வருந்தி தனக்குப் பணிவிடை செய்யும் செவிலியிடம் பாடும் பாடல்.

இடையிசையாக ஷெனாய், அக்கார்டியன், கிடார் கார்ட்ஸ் ஆகியவற்றை உபயோகித்து நாயகனின் சோகமான மனநிலையை  நன்கு வெளிப்படுத்தியிருப்பார்கள் இரட்டையர். சரணத்தின் வரிகளுக்கு இடையே வரும் ஷெனாய் சிற்றிசையும் வெகு நேர்த்தியாக இருக்கும். அளவோடு கூடிய தப்லாவின் தாள ஒலி, தேவையான இடங்களில் சிறு சிறு புல்லாங்குழல் இசை, என்று அளவுடன் கூடிய நேர்த்தியான இசையமைப்பு. பாடல் வரிகளும் நாயகனின் மன நிலைக்கு ஏற்றாற்போல்

 "கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா"

என்று அற்புதமாக இயற்றப் பட்டிருக்கும், அதற்கு ஆறுதல் கூறும் விதமாக செவிலி பாடும் பாடல் வரிகளும் மிகவும் எளிமையாகவும் பொருத்தமாகவும், இருக்கும். டி எம் எஸ், பி சுசீலா ஆகியோரின் பங்களிப்பும் இந்தப் பாடலுக்கு ஒரு பக்க பலம். கவிஞரின் வார்த்தைகளோ சொல்லில் அடங்காது. சிந்து பைரவி ராகத்தில் ஒரு சோக ரசத்தைப் பிழிந்து தரும் பாடல் இது.

அடுத்து திரு கே வி மகாதேவன் இசையில், முற்றிலும் மாறுபட்ட, ஒரு நாட்டுப் புறப் பாடல், ஒரு விவசாயி வயல்வெளியில்  பாடுவது போல அமைந்த பாடல். மக்களைப் பெற்ற மகராசி என்ற படத்திலிருந்து "மணப்பாறை மாடு கட்டி" என்ற பாடல்.
விவசாயத்திற்கு புகழ்பெற்ற ஊர்களின் பெயரில் வரிகளை அமைத்து இயற்றப் பட்ட பாடல். சிறிதும் ஆடம்பரமின்றி, அமைதியான களத்துமேட்டு சூழ்நிலையில், டேப்பு, கடம், வயலினை, கொட்டாங்கச்சி வயலின் போன்று வாசித்தல், ஆகியவற்றின் மூலம் ஒரு கிராமிய மணம் கமழும் பாடலாக இசையமைக்கப் பட்ட பாடல். பாடலின் நடுவே வரும் வசனமும், நாமும் வயலில் கூடவே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. "பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே" என்ற இடத்தில் வரும் ஆலாபனை பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது. சிந்து பைரவி இராகத்தை நாட்டுப் புறப் பாடல்களுக்கும் உபயோகிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டிய  முதல் பாடல் இது.

மற்றும் இந்த இராகத்தில், |உனக்கென்ன மேலே நின்றாய்" - சிம்லா ஸ்பெஷல் - எம் எஸ் வி, "சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே" - திருவருட்செல்வர், "கொஞ்சும் கிளியான பெண்ணை" - கூண்டுக்கிளி, "ஒன்றானவன், உருவில் இரண்டானவன்" கே வி மகாதேவன் இசையில் அமைந்த பாடல்கள், இளையராஜா இசையில் (சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்) அன்னக்கிளியே உன்னைத் தேடுதே - அன்னக்கிளி, என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன், கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - புதுப் புது அர்த்தங்கள் போன்ற சில,

ஹிந்தியிலிருந்து இரண்டு பாடல்கள் குறிப்பிடுகிறேன். "ஜீனா யஹான், மர்ணா யஹான்" மேரா நாம் ஜோக்கர், ஷங்கர் ஜெய்கிஷன் இசையில். "பர் பாத் கே இஸ் பர், பர் பாத் கே உஸ்  பர்" - ரஃபி, லதா, சர்கம் படத்திலிருந்து, லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில்.

புகழ்பெற்ற மிலே சுர் மேரா துமாரா பாடலும் சிந்து பைரவி இராகத்தில்தான் அமைக்கப்பட்டது.

பிறிதொருநாள் இன்னொரு இராகத்துடன் சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.

ஜெய்ஹிந்த்!   

No comments:

Post a Comment