Tuesday, 20 January 2015

கல்யாணி (மெச்ச கல்யாணி) கர்நாடக இசையின் 65வது மேளகர்த்தா இராகம். ஹிந்துஸ்தானி இசையில் இது யமன் தாட் ராகத்தை சேர்ந்ததாகும். கல்யாணியும் யமனும், ஒரே இராகத்தின் இரண்டு பெயர்கள் என்று சொல்வார்கள். ஆனால் யமன் கல்யாணி இவற்றிலிருந்து சிறிது வேறுபட்டது எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம். இந்துஸ்தானி இசையில் இது முதலாகக் கற்றுத் தரப்படும் இராகம் ஆகும்.

இன்று இந்த இராகத்தில் எம் எஸ் வி இசையமைத்த "கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா, கிருஷ்ணா" என்ற பாடல் - தெய்வ மகன் என்ற படத்திலிருந்து. பாடலை இயற்றியவர் - கவியரசர் கண்ணதாசன்.

அருமையான சிதார் முன்னிசையுடன், TMS இன் உருக்கமான குரலுடன் பாடல் துவங்குகிறது.

 "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
என்று மெதுவாக துவங்கி மறுபடியும்

"கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா (சிறு சிதார் இசை)
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா 
சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தை  தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

புல்லாங்குழல் சிறு இசையுடன் கூடிய அற்புதமான சிதாரின்  இடையிசை சரணம் துவங்குமுன்

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை (புல்லாங்குழல் சிறு இசை)
ஓரிடம் நீ கொடுத்ததாய் கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழவிடு
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

இங்கு குழலும் சிதாரும் கலந்த இனிமையான இடையிசை

நீ உள்ள சன்னதியே   கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா
கோவிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
(குழல் சிறு இசை)

இங்கு குழல் சிறு இசை பின் சிதாரின் இடையிசையுடன் TMS இன் கிருஷ்ணா  ஆஆஆ கிருஷ்ணா ஆ ஆ ஆ என்று ஒரு சிறு ஆலாபனையுடன் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒரு சிறு இறக்கத்துடன் பாடுவார்

எண்ணை இல்லாதொரு தீபம்  எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணிமை போலெமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா

இதில் ஒவ்வொரு வரியின் முடிவிலும் கோவில் மணியோசை ஒலிக்கும். பின் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
என்றபடி ஒரு சிதாரின்  இசையுடன் முடித்து விட்டு அதை கீழே வைத்து விட்டு சிவாஜி தனது குருவான நாகையாவை நோக்கி சென்று கொண்டே

"கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா"
என்று பாடி முடிப்பார். பாடல் நிறைவுறும். ஆனால் பாடலின் நிறைவுப் பகுதியில் எதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை இசையாலேயே  உணர்த்தியிருப்பார் மெல்லிசை மன்னர்  இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள், TMS, சிவாஜி, நாகையா ஆகியோர் .  நெடுநேரம் நமது நெஞ்சங்கள் கனத்த அமைதியுடன்  இருக்கும் இந்தப்  பாடலை கேட்டால்.  கேளுங்கள்,அனுபவியுங்கள்.

இந்த இராகத்தில் அமைந்த  மற்ற சில பாடல்கள்:

"மஞ்சள் வெயில்  மாலையிலே" - காவேரி - ஜி ராமநாதன்
"சிந்தனை செய் மனமே" - அம்பிகாபதி - ஜி ராமநாதன்
"அமுதும் தேனும் எதற்கு" - தை பிறந்தால் வழி பிறக்கும் - கே வி மகாதேவன்
"தொரகுணா இட்டுவண்டி சேவா" - சங்கராபரணம் - கே வி மகாதேவன் 
"துணிந்த பின் மனமே" - தேவதாஸ் -கண்டசாலா
"ஆடும் அருள் ஜோதி" -  மீண்ட சொர்க்கம் - சலபதி ராவ்
"உந்தன் பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா" - பெண் - ஆர் சுதர்சனம்  
"முகத்தில் முகம் பார்க்கலாம்" - தங்கப் பதுமை - விஸ்வநாதன் ராமமூர்த்தி
"தானே தனக்குள் சிரிக்கின்றாள்" - பேரும் புகழும்-எம் எஸ் விஸ்வநாதன்
"மஞ்சள் வெயில்  மாலையிட்ட பூவே" - நண்டு - இளையராஜா
"வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்" - காதல் ஓவியம் - இளையராஜா
"தேன் சிந்துதே வானம்" - பொண்ணுக்கு தங்க மனசு - ஜி கே வெங்கடேஷ்
"ஆழ்கடலில் முத்தெடுத்து" - ராகம் தேடும் பல்லவி - டி ராஜேந்தர்

நிறையப் பாடல்கள் உள்ளதால் ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் இரண்டு பாடல்கலுக்கு மேற்படாமல் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஹிந்தி திரைப் படங்களிலிருந்து இரண்டு பாடல்கள்"
"மன்  ரே து காஹே  ந தீர் தரே" - ரஃபி - சித்ரலேகா - ரோஷன்
"ஜிந்தகி பர் நஹி"  - ரஃபி - பர்சாத் கி ராத் - ரோஷன்

பிறிதொரு நாள் மற்றொரு இராகத்துடன் சந்திப்போம.
நன்றி, வணக்கம் .
ஜெய்ஹிந்த்!


No comments:

Post a Comment