Tuesday, 20 January 2015

இன்றைய இராகம் மோகனம்
மோகனம் 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம்  விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.

இது திரிஸ்தாயி (மூன்று ஸ்தாயியிலும் பாடக் கூடிய) இராகம் ஆகும்.

இது ஒரு புராதன இராகம் ஆகும். எல்லா உருப்படி வகைகளையும் இந்த இராகத்தில் காணலாம். சுலோகங்களும், விருத்தங்களும் பாடுவதற்கேற்ற இராகம் ஆகும். இது ஒரு வர்ணனைக்குரிய இராகம் ஆகும். இசை நாடகங்களிலும், நிருத்திய நாடகங்களிலும் காணப்படும் பிரசித்த இராகங்களில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலும் இரவின் முற்பகுதியில் (6 லிருந்து 9 வரை) பாடுவதற்கேற்ற நேரம், இந்த இராகத்திற்கு.

மனிதவர்க்கத்துக்கு தெரிந்த மிகப் பழைய இராகம் இது ஆகும். இந்த இராகத்தில் வரும் ஸ்வரங்கள் ஷ்ட்ஜ - பஞ்சம முறையில் முதன் முதலில் தோன்றும் ஸ்வரங்களாகும். இது தொன்று தொட்டு எல்லா நாட்டு இசைக் கலைஞர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆதிவாசிகளின் இசையிலும் பாமரமக்கள் இசையிலும் கூட இவ்விராகம் வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்துஸ்தானி இசையில் பூப் என்பது இவ்விராகமே.
இவ்விராகத்தின் ரிஷப, காந்தார, பஞ்சம, தைவத, மூர்ச்சனைகளே முறையே மத்தியமாவதி, இந்தோளம், சுத்தசாவேரி, உதயரவிச்சந்திரிகா ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன. முல்லைப்பண் எனக் குறிக்கப்படுவது மோகன இராகமே ஆகும்.

" திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" எனச் சிறப்புப் பெற்ற மாணிக்கவாசகரின் திருவாசகங் கூட தொன்று தொட்டு இந்த இராகத்தில் பாடப்பட்டு வருவது இவ்விராகத்தின் சிறப்பை உணர்த்துகின்றது.

"MIDDLE EAST" எனப்படும் மத்தியக் கிழக்கு நாடுகளின் பாரம்பரிய இசை பெரும்பாலும் மோகன ராகத்திலேயே அமைந்துள்ளது.

இன்றும் நாம் மெல்லிசை மன்னர் இந்த இராகத்தில் இசையமைத்த இரு பாடல்களைப் பாப்போம்.

முதல் பாடல், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் "பன்சாயீ, காதல் பறவைகள், பாடும் கவிதைகள்" என்ற பாடல். பாடல் பாங்காக் நகரில் நடைபெறுவது போல் காட்சியமைப்பு. அதற்கேற்றற்போல் மன்னா, இசைக்கரூவிகளை கையாண்டிருக்கும் விதம் நம்மை பாங்காக்கில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வரிகளை பிரித்துக் கையாண்டிருக்கும் விதமும் ஒரு"ORIENTAL SONG" போன்றே தோற்றமளிக்கிறது. பாடல் முழுவதும் இதே பாணியைக் கடைப் பிடித்திருக்கிறார் மன்னார். இதற்கு இவர் நிறைய உழைத்திருக்க  வேண்டும். பாடலை கேட்டு முடித்த பின்னரும், நாம் பாங்காக்கில் படகில் பயணிப்பது போன்றே உணர்வு மிஞ்சுகிறது நமக்குள். அதுவே  மன்னரின் சிறப்பு.

பாடல் இரண்டு. கம்பன்  ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது என்ற படத்திலிருந்து. இது ஆதிக்க மனப்பான்மையுடைய பெண்களின் இயல்பை பற்றிய வர்ணனையாக அமைந்திருக்கிறது. அல்லி ராணியையொத்த நாயகியை நாயகன் வர்ணித்துப் பாடும் பாடல்.  "அம்பு விழி என  ஏன் சொன்னான் அது பாய்வதினால்தானோ, அவள் அருஞ்சுவைப் பால் என ஏன் சொன்னான்  அது கொதிப்பதனால்தானோ" என்ற கவிஞரின் வரிகளில் நாயகியின் ஆளுமைத் தன்மை நன்குபுலப்படுகிறது. இந்தப் பாடலுக்கு ஆரவாரமில்லாது இசையமைத்து பாடலுக்கு அழகூட்டியிருக்கிறார் மன்னர்.

மேலும் "இந்த காற்று வெளியிடைக் கண்ணம்மா", - கப்பலோட்டிய தமிழன், "கண்மணியே காதல் என்பது" - சிட்டுக் குருவி ஆகிய பாடல்களும் மோகனத்தில் அமைந்த சில பாடல்கள்மதுரை மணி ஐயரின் " கருணை  நிலவு பொழி வதனம"என்ற பாடலும் மோகனத்தில் அமைந்தது.

இந்த இராகத்தில் (BHUP) இரண்டு ஹிந்திப் பாடல்கள்: "சயனோரா, சயனாரோ, - லவ் இன் டோக்யோ, லதா மங்கேஷ்கர்.
"கௌன் ஹை  தும் கௌன் ஹை வோ", ஸ்திரீ என்ற படத்திலிருந்து, மகேந்திர
 கபூர் ஆகியவை.

இன்னொரு நாளில் இன்னொரு இராகத்துடன் சந்திப்போம்.
நன்றி! வணக்கம்,

ஜெய்ஹிந்த்!

No comments:

Post a Comment