Tuesday, 20 January 2015

மத்தியமாவதி இராகம் 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். இது ஒரு சுத்த கர்னாடக இராகம். இது திரிஸ்தாயி இராகம் என்பதுடன் இது ஒரு புராதன இராகம் ஆகும். தேவாரப் பண்களில், செந்துருத்தி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது. இது பாடவேண்டிய காலம் நண்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம். இந்த இராகத்தை கச்சேரி, பஜனை, காலஷேபம், நாடகம் முதலிய நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடி முடிக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது.

இன்று மெல்லிசை மன்னரின் இசையில் அமைந்த, "முத்துக்களோ கண்கள்" என்ற பாடலைப் பற்றிப் பார்ப்போம். இடம் பெற்ற படம் - நெஞ்சிருக்கும் வரை, பாடலை இயற்றியவர் - கவியரசர்.

கிடார், சிதார், புல்லாங்குழல் மூன்றும் சேர்ந்த முன்னிசையுடன் பாடலின் பல்லவி துவங்குகிறது.

"முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்"
இதில் தித்திப்பதோ என்ற இடத்தில் டி எம் எஸ் தித்திப்பதோ ........ என்று மெருகூட்டும் இடம் அருமை.
"சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை" என்று டி எம் எஸ் முடித்தாதும், சுசீலா அவர்கள் சிறிது உச்ச ஸ்தாயியில் "படித்த பாடல் என்ன" என்று துவங்கும் இடமும் மனத்தைக் கிளரச் செய்கின்றது. பல்லவியில் தப்லாவின் ஒலியை சற்றே உயர்த்தி வாசிப்பதும் பாடலுக்கு அழகூட்டுகிறது.


சரணங்களுக்கு முன் அக்கார்டியன், சிதார், குழல்  மூன்றும் சேர்ந்த இசை மனதை வருடுவதாக உள்ளது. பாடலை நிறைவு செய்யும் இடத்தில் சுசீலாவின் குரலில் வரும் ஹம்மிங்கும் கூடவே ஒலிக்கும் குழலும் சிறிது சிறிதாக மங்கிக் கொண்டே வந்து பாடல் நிறைவுறும். இது ஒரு கனவுக் காட்சி. பாடல் முடிந்ததும் நாமும் ஒரு இனிய கனவிலிருந்து விழித்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது மெல்லிசை மன்னரின் இசை.

இந்த இராகத்தில் அமைந்த மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் சில:
"ஜனார்தனா, ஜெகன்னாதா - மீரா - எஸ் வி வெங்கட்ராமன்
"திருமால் பெருமைக்கு" - திருமால் பெருமை, கே வி மகாதேவன் 
"பொய்யின்றி மெய்யோடு நெய்  கொண்டு போனால்" -சரணம் ஐயப்பா - சந்திரபோஸ்
"இது குழந்தை பாடும் தாலாட்டு" - ஒரு தலை இராகம் -
டி ராஜேந்தர்
"ஆகாய கங்கை - தர்ம யுத்தம், "தாகம் எடுக்கிற நேரம்" - எனக்காகக் காத்திரு, "என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்" - அழகே உன்னை ஆராதிக்கிறேன், "கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்" - காற்றினிலே வரும் கீதம், "நீதானே என் பொன் வசந்தனம்" - நினைவெல்லாம் நித்யா, "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு" - கொடி பறக்குது, "தாலாட்டு, பிள்ளை  என்னை தாலாட்டு" - அச்சாணி, "துள்ளி துள்ளி நீ பாடம்மா" - சிப்பிக்குள் முத்து, "கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்" - தென்றலே என்னைத் தோடு, "பூப்பூக்கும் மாசம் தை மாசம்" - வருஷம் பதினாறு, ஆகியவை இளையராஜாவின் இசையில்.

மீண்டும் ஒரு இராகத்துடன் மற்றொருநாள் சந்திப்போம்,
நன்றி! வணக்கம்.
ஜெய்ஹிந்த்!







No comments:

Post a Comment