இன்றைய இராகம் நடபைரவி:
நடபைரவி கர்நாடக இசையின் 20 வது
மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 வது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள.
இது வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 வது இராகம். இந்துஸ்தானி இராகத்தில்
இதற்கு ஈடானது அசாவேரி இராகம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி
ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1),
கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகின்றன.
இதன் க, ம, ப, த, நி முறையே கிரக
பேதத்தின் வழியாக சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22), தோடி (08), மேசகல்யாணி
(65), ஹரிகாம்போஜி (28) ஆகிய மேளங்களைக் கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக
மாற்றினால் இராகம் சண்முகப்பிரியா (56) ஆகும்.
ஐரோப்பிய இசையிலும், கிரேக்க இசையிலும்
இதற்கு ஈடான இசை அமைப்பு இருப்பதாக தெரிகிறது.
பாடுவதற்கேற்ற நேரம்: காலை 6 மணி
முதல் 9 மணி வரை.
பாடுவதற்கேற்ற மன நிலைகள்: பக்தி,
சிருங்காரம், கருணை, இரக்கம் போன்றவை.
நடபைரவியின் ஜன்ய இராகங்கள்:
பைரவி, ஆனந்தபைரவி, ஜயந்தஸ்ரீ,
சாரமதி, பூர்ணஷட்ஜம், இந்தோளம், மாஞ்சி, மார்க்கஹிந்தோளம், அமிர்தவாஹினி, சுத்ததெசி,
ஜிங்களா, ஹிந்தோளவசந்தம், கோபிகாவசந்தம், கமலாதரங்கிணி, திவ்யகாந்தாரி, புவனகாந்தாரி,
சுத்தசாளவி, நவரசச்சந்திரிகா, கோமேதகப்பிரியா, பாகீரதி, ரதிபதிப்பிரியா போன்றவை.
இன்று நாம் இந்த இராகத்தில் மெல்லிசை
மன்னர்களின் இசையில் உருவான "நினைக்கத் தெரிந்த மனமே" என்ற, ஆனந்த ஜோதி படத்தில்
இடம் பெற்ற பாடலைப் பற்றிப் பார்ப்போம். பாடலைப்
பாடியவர் பி சுசீலா, பாடலை இயற்றியவர்., கவிஞர் கண்ணதாசன்.
அக்கார்டியன், வயலின் கலந்த ஒரு
முன்னிசையுடன் பல்லவி துவங்குகிறது. "நினைக்கத் தெரிந்த மனமே ...........உயிரே
விலகத் தெரியாதா" என்ற பல்லவி வரை பாங்கோஸின் மிதமான நடை தாள வாத்தியமாக உடன்
வருகிறது. ஆர்ப்பாட்டம் மிகுந்த ஒரு ஆப்பிரிக்க வாத்தியத்தை ஒரு சோகமான சூழ்நிலைக்கு
பயன் படுத்தியுள்ளனர் மன்னர்கள். நிறைய சோகப் பாடல்களில் இந்த வாத்தியத்தை பயன்படுத்தியிருக்கின்றனர்.
சரணத்திற்கு முன் வரும் ஷெனாய், வயலின் கலந்த இடையிசை நாயகியின் சோகமான
மனநிலையை விளக்குவதாக இருக்கின்றது. சரணங்களுக்கு ஊடேயும் சிறு சிறு ஷெனாய் இசை வருவது
பாடலுக்கு மெருகூட்டுகிறது. சரணங்களுக்கு, தப்லாவை உபயோகப் படுத்தியிருக்கின்றனர் மன்னர்கள்.
பாடல் வரிகள் காதலியின், காதலிக்கும்போது இருந்த மனநிலையையும், பிரிவுக்குப் பின் உள்ள
மன நிலையையும் நன்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. பாடலைக் கேட்போர் நெஞ்சில் இரக்கத்தை உருவாக்கும்
இசையும், பாடல் வரிகளும் அமைந்துள்ளன.
இந்த இராகத்தில் அமைந்துள்ள வேறு
சில பாடல்கள்:
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
- களத்தூர் கண்ணம்மா -
ஆர் சுதர்சன்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும்
வெண்ணிலவே - புதையல் - எம் எஸ் வி -டீ கே ஆர்
ராகங்கள் 16 உருவான வரலாறு - தில்லு
முல்லு - எம் எஸ் வி
ராஜாவின் பார்வை - அன்பே வா
- எம் எஸ் வி
நான் பார்த்ததிலே - அன்பே வா
- எம் எஸ் வி
கண்ணை நம்பாதே - நினைத்ததை முடிப்பவன்
- எம் எஸ் வி
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
- நினைத்ததை முடிப்பவன் -
எம் எஸ் வி
நாளை நமதே, நாளை நமதே - நாளை நமதே
- எம் எஸ் வி
ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி
- இளையராஜா
ஆத்து மேட்டுல ஒருபாட்டு கேக்குது
- கிராமத்து அத்தியாயம் - இளையராஜா
அந்தி மழை மேகம் - நாயகன் - இளையராஜா
என் இனிய பொன் நிலாவே - மூடுபனி
- இளையராஜா
ஹேய் ஐ லவ் யூ, ஐ லவ் யூ - உன்னை
நான் சந்தித்தேன் - இளையராஜா
இளம்பனித் துளி விழும் நேரம்
- ஆராதனை - இளையராஜா
மடை திறந்து பாயும் நதியலை நான்
- நிழல்கள் - இளையராஜா
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்
வர - மௌனராகம் - இளையராஜா
ஓ, பட்டரஃபிளை பட்டரஃபிளை - மீரா - இளையராஜா
இந்த இராகத்தில் அமைந்த சில ஹிந்திப்
பாடல்கள்:
ஏ மேரே ஜிந்தகி ராத் ஜும்லே -
லதா மங்கேஷ்கர் - டாக்சி டிரைவர் - எஸ் டி பர்மன்
ராத் நே க்யா க்யா க்வாப் தேகாயே
- தலத் மெஹ்மூத் - ஏக் காவோன் கி கஹானி - சலீல்
சவுதுரி
அகர் முஜ்ஸே முஹப்பத் ஹை - லதா மங்கேஷ்கர் - ஆப் கி பர்சாயியான்
- மதன் மோகன்
டூட்டே ஹுவே க்வாபோனே, ஹம்கோ யே
சிகாயா ஹை - ரஃபி -
மதுமதி - சலீல் சவுதுரி
மேலே குறிப்பிட்ட பாடல்கள் யாவுமே
கேட்க கேட்கத் திகட்டாதவை. ரசியுங்கள், அனுபவியுங்கள். இன்னொரு நாள் வேறொரு இராகத்துடன்
சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.
ஜெய்ஹிந்த்!

No comments:
Post a Comment