Tuesday, 20 January 2015

தமிழ்த் திரையுலகின் சிற்பிகள்: 4
எம்.ஆர்.ராதா, மதராஸ் ராசகோபால் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. 10 வயதில் தனது தாயார் தனக்கு ஒரு மீன்துண்டு அதிகமாக தரவில்லை என்று கோபித்துக் கொண்டு வீட்டை வெளியேறியவர். தனக்கென்று ஒரு தனிப் பாணி உடைய நடிகர். சிவாஜியும் சரி, எம்ஜியாரும் சரி, இவருடன் நடிக்கும்போது எச்சரிக்கையாக நடிக்கவேண்டும், அந்த அளவு நடிப்பாற்றல் மிக்கவர். "நடிகவேள்" - நடிகர்களின் வேந்தர் என்ற பொருள்பட அழைக்கப் பட்டவர். ரத்தக் கண்ணீர் என்ற தனது நாடகத்தின் மூலம் பிரபலமானவர், அது பிறகு படமாகவும் வெளி வந்து பெரும் வெற்றி பெற்றது.இவர் கொடூரமான வில்லனாக என்றுமே காட்சியளித்ததில்லை. சராசரி மனிதனைப் போன்றே இருக்கும் இவரது நடிப்பு. இன்றைய நாகரீக வில்லன்களுக்கு இவர்தான் முன்னோடி என்றால் அது மிகையாகாது. நகைச்சுவை நடிப்பிலும் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையைப் பதித்தவர். இவரது வசன உச்சரிப்பு அலாதியானது. ஒவ்வொரு வாக்கியத்தையும் இருவேறு தொனிகளில் பேசுவார். அதை இதுவரை ஒருவராலும் முழுதாக பின்பற்ற முடியவில்லை. படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் ராவ் பகதூர் என்பதை ராவ்... பகதூர் என்று நீட்டி சொல்வது, மிகுந்த சிரிப்பை வரவழைக்கும், இது ஒரு மாதிரிதான் இவருடைய வசன உச்சரிப்புக்கு. "FOREIGNLA நீராவில கப்பல் வுடறான், ரயில் விடறான், இங்க நம்மாளு குழாப்புட்டு சுடறான்" போன்ற நையாண்டி வசனங்கள் இவருக்கே உரித்தது. இவர் கோபத்துடன் பேசும் வசனங்களும் சிரிப்பை வரவழைக்கும், "என்னையாட வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லரே, நான் யார் தெரியுமா, ராவு காலத்துல பிறந்தவன்டா" என்று சிவாஜியிடம் சொல்வார், பச்சை விளக்கு என்ற படத்தில். அமைதியாக நடித்தாலும் சரி, ஆர்ப்பாட்டமாக நடித்தாலும் சரி, ரசிக்கும்படியாக இருக்கும் இவரது நடிப்பு. நீயே உனக்கு என்றும் நிகரானவன், என்ற பாடலில் இவரது அங்க சேஷ்டைகள் பலத்த சிரிப்பை வரவழைக்கும்.

ஒரு வித்தியாசமான வில்லன் நடிகர்

No comments:

Post a Comment