Tuesday, 20 January 2015

இன்றைய இராகம் சுபபந்துவராளி :

சுபபந்துவராளி இராகம் கர்நாடக இசையின் 45 வது மேளகர்த்தா இராகமாகும்.  இந்த இராகத்திற்கு சிவபந்துவராளி என்றும்  பெயர் உண்டு. இந்துஸ்தானி இசையில் தோடி தாட் என்று பெயர்.

சுபபந்துவராளியின் ஜன்ய இராகங்கள் இவை.

பானுகீரவாணி, ராமகலி, நடனவேளாவளி ,ரத்னகர்ப்ப, புஷ்கரணி, மாயாதாரிணி, அம்போதம், நாட்டிகா ஆகியவை.

இது கருணை சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.

இந்த இராகத்தை மெல்லிசை மன்னர் எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள் என்று காண்போம்.

பாடல் இடம் பெற்ற படம் - லக்ஷ்மி கல்யாணம். பாடல் "ராமன் எத்தனை ராமனடி" பாடியவர் - பி சுசீலா. இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன்.

இந்தப் பாடல் பெண் பார்க்கும் படலத்தில் பாடுவதாக அமைந்தது. முதலில்  "ராமன் எத்தனை ராமனடி" என்று சுசீலா பாடியதும்  ஒரு சிறு சிதாரின் இசை. பின் அதே வரியை அவர் மீண்டும் பாடியதும் ஒரு நீண்ட இனிய சிதாரின் இசை.
பின் 
"ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி"
என்று முழுப் பல்லவியும் ஆரம்பிக்கிறது.

தொடர்ந்து இராமனின் தோற்றத்தையும் அவனது பண்புகளையும் பற்றிப் பாடும் வரிகளுக்கு இனிமையான சிதார், புல்லாங்குழல், தப்லா ஆகிய  கருவிகளின்  பின்னணியில் மிதமான நடையில் தொடரும் பாடல்,
"வம்சத்திற்கொருவன் ரகுராமன்" என்று ஆரம்பிக்கும்போது சற்று வேகம் பிடித்து, "ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் , நம்பின பேருக்கு எது பயம்" என்ற வரிகளில் முழு வேகத்துடன் ஏறக்குறைய  பஜனை நடையில் பயணித்து ஒரு பக்திப் பாடலாகவே மாறி விடுகிறது. பாடல் முடியும்போது படத்தில் வருவது போன்றே நாமும் பக்திப் பரவசத்தில் மூழ்கும்  நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது மன்னரின் இசை.

அடுத்த பாடல் மெல்லிசை மன்னர்களின் இசையில், ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் வரும் "உன்னை நான் சந்தித்தேன்" என்ற பாடல்.

இதைக் காதல் விரகத்தில் பாடும் பாடலாகவும் எடுத்துக் கொள்ளலாம், காதலனின் கருணையை வேண்டிப் பாடும் பாடலாகும் எடுத்துக் கொள்ளலாம்.

"உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்"
என்று சுசீலா தொடங்கும்போது உடன் ஒலிக்கும் நாக்ராவின் ஒலி, சரணத்திற்கு  முன் குழலும் ஷெனாயும் சேர்ந்த இடையிசை, சரணங்களுக்கு நாக்ராவிலிருந்து தப்லாவிற்கு மாறும் தாள நடை, சரணங்களின் இறுதியில் நடையை மட்டுப் படுத்தி முடிக்கும் விதம் அத்தனையுமே மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப் பட்ட்ருக்கின்றன. பிரிவால் வாடும் காதலர்களின் உள்ளத்தைப் பிழியும் பாடல் இது என்றால் மிகையாகாது.

இன்னும் இந்த இராகத்தில் "பாலும் பழமும் என்ற படத்திலிருந்து. "இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா =
விஸ்வனாதன்-ராமமுர்த்தி", "காலமகள் கண்திறப்பாள் சின்னையா" - ஆனந்த ஜோதி - MSV - TKR, "வைகறையில் வைகைக் கரையில்" - பயணங்கள் முடிவதில்லை,  "ஆயிரம் தாமரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை, "மானே தேனே கட்டிப் புடி - உதய கீதம்" "நிலவே முகம் காட்டு" ஆகிய பாடல்கள் இளையராஜாவின் இசையிலும் உள்ளன.

இன்னும் ஒரு நாள் இன்னொருஇராகத்துடன்  சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.
ஜெய்ஹிந்த்!






No comments:

Post a Comment