Saturday, 20 December 2014

பாரதியும் கண்ணதாசனும்:

20 ஆம் நூற்றாண்டில் நாமறிந்த கவியரசர் கண்ணதாசன், அவருக்கு முந்தைய நூற்றாண்டை சேர்ந்தவரான மகாகவி பாரதியாரின் சிந்தனைகளை ஒத்தவராயிருந்தார். ஒரு சிறிய ஒப்பீடு:

"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ " மகாவியின் இந்த இரண்டு வரிகளை எடுத்துக் கொண்டு கண்ணதாசன் வியட்நாம் வீடு படத்திற்காக எழுதிய  பாடல்வேலையிலிருந்து ஒய்வு பெற்ற கணவன் தனக்கும் தனது மனைவிக்கும் அந்த வீட்டில் மதிப்பில்லை என்பதை உணர்ந்து, தன் மனைவி தனக்கு எவ்வாறெல்லாம் பணிவிடை செய்து வந்தாள் என்பதை எண்ணி மனமுருகிப் பாடும் பாடல்.

காலசுமைதாங்கி போல தன்னை மார்பில் தாங்கி, தான் வேதனையில் இருக்கும் நேரம் சிந்துகின்ற கண்ணீர் தரையில் விழுவதற்குள் துடைத்து தன விம்மலை தணிக்கும் மனைவியின் கண்ணில் கண்ணீர் வடிந்தால் தனது நெஞ்சில் அந்தக் காட்சியை காண முடியாது, குருதி வடியும் என்கிறார் கவிஞர். ஆலம் விழுதுகள் போன்று உறவினர் ஆயிரம் பேர் இருந்தாலும், வேரென தன்னை அவள் தாங்கிப் பிடித்ததால்தான் தான் சாய்ந்து விடாது தலை நிமிர்ந்து வாழ்ந்திருந்தேன் என்கிறார். மேலும் பிள்ளைகள் என்று பெயருக்கு இருந்தாலும், பேசுவதற்கு உறவினர்கள் இருந்தாலும், தனது தேவையை தெய்வம் போன்ற அவள் மட்டும்தான் அறிவாள் என்கிறார்.

பாரதியின் கவிதையில் இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அதை தனது பாடலுக்கு பொருந்துமாறு வரிகளை புனைந்த கவிஞரின் திறமையை என்னென்று பாராட்டுவது?

பாடல் 2 - "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"

இதில் "பாலென்ன அழுவோர்க்கு பால் தருவோம், பசுங்கூழென துடிப்போர்க்கு சோறிடுவோம்" என்ற வரிகளில், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற மகாகவியின் சமத்துவ உணர்வு பளிச்சிடுகிறது. மேலும் "தாயகம் காப்போரின் தாள் பணிவோம், யாவும் தமக்கென நினைப்போரை சிறையிடுவோம்" என்ற வரிகளில் பாரதியின் தேசபக்தியும் வெளிப்படுகிறது.

"கிணற்றில் இருந்துகொண்டு உலகளப்பார், சிலர் இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார், நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார், இந்த நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்" என்று பாடும்போது, "நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால், அந்தோ" என்ற பாரதியின் ஆதங்கம் புலப்படுகிறது.

நம்மில் பல பேர் பாரதியைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கண்ணதாசனின் மூலம் பாரதியை நாம் சந்திக்க  முடிந்தது நாம் பெற்ற பெரும் பாக்கியமாகும்.


ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment