Saturday, 21 March 2015

தமிழ்த் திரையின் சிற்பிகள் 9:

டி எஸ் பாலைய்யா. நடிப்புக்கு ஒரு "பலே அய்யா".வில்லன் பாத்திரமா, நகைச்சுவையா, அல்லது உணர்ச்சிபூர்வமான குணச்சித்திர வேடமா? பாலைய்யாவை போட்டுக் கொள்வோம் என்று சொல்லுமளவுக்கு மிகவும் அனாயாசமாகவும் தனித்துவம் நிறைந்தும் செய்யக் கூடியவர். தனது குரலை சற்றே ஏற்றி இறக்கி, சிறு அதிர்வுகளைத் தந்து தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர்.

குரூர நோக்குடன் முகத்தில் புன்னகையை மலர விட்டவாறே பாட்டு வாத்தியாராக நடித்த மணமகள்,  தில்லானா மோகனாம்பாளில் "என்ன இன்னிக்கு ஆட்டம் ஜாஸ்தியாய் இருக்கே" என்று ரயிலின் ஆட்டத்தை சொல்வது போல் மோகனாவின் தாயாரை அடிக்கும் கிண்டல், "எனக்கு அங்கே ஒரு சோடாக் கடைக்கரனைத் தெரியும்" என்று பிடிவாதமாக சிவாஜியிடம் நானும் வருவேன் என்று பிடிக்கும் அடம்,  நகை விற்கும் சேட்டாக தூக்கு தூக்கியில் "அரே  பியாரி, நிம்மல் மேலே நம்கீ மஜா", பாகப் பிரிவினையில் குடும்பத்தை இரண்டாக எம் ஆர் ராதா பிரிப்பதை தடுக்க இயலாமல் வருந்தி கண்ணீர் சிந்துவது, போன்றவை பாலையாவின் சில மிக சிறந்த பாத்திரங்கள். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல், திருவிளையாடல் படத்தில் அகந்தை நிரம்பிய ஹேமநாத பாகவதராக நடித்து பாண்டிய நாட்டவரை சவாலுக்கு அழைப்பது அமைந்தது. இதில் ஒரு நாள் போதுமா என்ற திரு பாலமுரளியின் பாடலுக்கு மிகவும் தத்ரூபமாக ஒரு கைதேர்ந்த இசை வல்லுனரைப் போல நடித்தது இவரது தனிச் சிறப்பு.

சிறுவயதில் திருநெல்வேலியில் முகாமிட்டிருந்த சர்க்கஸ் கம்பெனியால் கவரப்பட்டு சர்க்கஸில் சேரும் ஆசையில் வீட்டை விட்டு ஓடி மானாமதுரை சென்றார். அங்கே கையிலிருக்கும் பணம் யாவும் செலவானதும் சிறு ஹோட்டலிலும், ஒரு இறைச்சிக் கடையிலும் வேலை பார்த்து, பின் திருநெல்வேலிக்கே திரும்பி வந்தார். அப்போது ஜெகன்னாத அய்யர் என்பவரின் நாடகக் குழு அங்கு  முகாமிட்டிருந்தது. அதில் பாலையா சேர்ந்தார், சில நாட்களிலேயே அந்த கம்பெனி மூடப்பட்டது. நாகலிங்க செட்டியார் என்பவர் பாலா மோகன சங்கீத சபா என்றொரு நாடகக் குழுவை ஆரம்பித்து அதில் ஜெகன்னாத அய்யர் குழுவிலிருந்த சிலரை சேர்த்துக் கொண்டார். அங்கு அவருக்கு குறைவான வேடங்களே கிடைத்தன. ஒரு முறை அவர்கள் ஷேக்ஸ்பியரின் CYMBELINE என்ற நாடகத்தை மேடையேற்றியபோது, அதில் பெசானியோ (PESANIO) வேடத்தில் நடித்த நடிகர், பாலையாவிடம் அந்த வேடத்தில் நடித்து குறைந்தது மூன்று முறையாவது கைத்தட்டல் வாங்க முடியுமா என்று சவால் விட்டதை ஏற்ற்றுக் கொண்டு அவ்வேடத்தில் நடித்தார். அவர் மேடையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அவருக்கு கைத்தட்டல்கள் கிடைத்தன. இதுவே அவருக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

அந்தக் கம்பெனியும் மூடப்பட்ட பின் பாலையா திரு எம் கே கந்தசாமி முதலியாரது (நடிகர் எம் கே ராதாவின் தந்தை) ராஜாம்பாள் நாடகக் குழுவில் இணைந்தார். கந்தசாமி முதலியார் எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் தனது கதை வசனத்தில், தனது மகன் எம் கே ராதா கதாநாயகனாக நடிக்கும் சதிலீலாவதி படத்தில் இவருக்கு வாய்ப்பளித்தார். இந்தப் படத்தில் மக்கள் திலகம் எம் ஜி ஆரும் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத் தக்கது.

இவரது நடிப்பால் கவரப்பட்ட எல்லிஸ் ஆர் டங்கன், தனது அனைத்துப் படங்களிலும் அவருக்கு வாய்ப்பளித்தார். அம்பிகாபதி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இவர் ஒரு சிறந்த வில்லனாக உருவெடுத்தார்.

நாடகத்தின் மீது உள்ள தீராக் காதலினால் சொந்தமாக ஸ்ரீ சாயி பால கான சங்கீத சபா என்ற குழுவை தொடங்கி அதில் பெருத்த நஷ்டம் அடைந்தார். பிறகு அந்தக் குழுவை மூடி விட்டார்.

இவருக்கு மறுபடியும் திரைப் பட வாய்ப்புகள் வந்தபோது இவர் ஒரு துறவி போன்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். வேலைக்காரி, ஒரு இரவு போன்ற படங்களில் இவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் மிகவும் பாராட்டப் பெற்றன. பின்னாளில் இயக்குனர் பீம்சிங் இவருக்கு தனது "பா" வரிசைப் படங்களில் வாய்ப்பளித்தார். இயக்குனர் ஸ்ரீதர், இவருள்ளே இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு ஆகிய படங்களில் வேடங்கள் தந்தார். இதில் காதலிக்க நேரமில்லையில் இவரும் நாகேஷும் தோன்றும் கதை சொல்லும் காட்சியில் இவரது முகபாவங்களும் வசனங்களும் இவருக்கே உரித்தானவை. பாலச்சந்தர் அவர்களின் பாமா விஜயத்தில் ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக வந்து இவர் பாடிய "வரவு எட்டணா, செலவு பத்தணா" பாடல் மிகவும் பிரபலம், வேறு எந்த குணச்சித்திர நடிகருக்காவது இவருக்கு அமைந்தாற்போல் பாடல்கள் அமைந்திருக்குமா என்பது சந்தேகமே.

எம் ஆர் ராதா இயக்கத்தில் "சுட்டான், சுட்டேன்" என்ற படத்தில் நடிக்க இருந்த சமயத்தில் நோய்வாய்பட்டு தனது 58ஆவது வயதில் காலமானார்.

இவருக்கு திரை உலகமோ, அல்லது தமிழக அரசாங்கமோ தகுந்த கௌரவத்தை அளிக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.

(COURTESY: MR MOHAN RAM'S 100 YEARS OF LAUGHTER)

Thursday, 19 March 2015

தமிழ்த் திரையுலக சிற்பிகள் 8.

ஜெமினி கணேசன். வாராயோ வெண்ணிலாவேயிலிருந்து ஆரம்பித்து, காலங்களில் அவள் வசந்தம், பாட்டு பாடவா என்று பாடி நமது உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகர். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் , ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

திரையுலகுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பாகச் சில காலம் ஜெமினி கணேசன் ஆசிரியப் பணி ஆற்றி வந்தார். ஜெமினி நிறுவனத்தில் அவர் மேலாளராகச் சேர்ந்தார்!1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடம் தாங்கினார். ஆனால், பலரது கவனத்தையும் ஈர்த்தது  1952ஆம் ஆண்டின் வெளியான தாயுள்ளம். ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாகவும், எம்.வி.ராஜம்மா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தில் அவர் கவர்ச்சி வில்லன் வேடம் ஏற்றிருந்தார். (பின்னாளில் அவர் கதாநாயகனாக நடிக்கையில் மனோகர் வில்லன் கதாபாத்திரங்களில் நிலை பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான "பெண்". இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார். வைஜயந்தி மாலாவும் நடித்த இப்படத்தில், வீணை வித்வானாகவும், புதுமை இயக்குனராகப் புகழ் பெற்றவருமான எஸ்.பாலச்சந்தர் ஜெமினி கணேசனின் நண்பனாக வேடம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது 1953ஆம் ஆண்டின் "மனம்போல மாங்கல்யம்". இதில் அவர் முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின் போதுதான், இதில் தன்னுடன் நடித்த, பின்னாளில் நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற சாவித்திரியை அவர் மணந்து கொண்டார்.

காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெறத்துவங்கிய ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாகவும் அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புல்லரிக்க வைப்பதாக அமைந்த ஒன்று.

ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "கற்பகம்", "சித்தி", "பணமா பாசமா", "சின்னஞ்சிறு உலகம்" ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.

புதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், "மீண்ட சொர்க்கம்", "சுமை தாங்கி"  "அவளுக்கென்று ஓர் மனம்" போன்ற பல படங்களை இயக்கினார்.

கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்", "பூவா தலையா", "இரு கோடுகள்", "வெள்ளி விழா", "புன்னகை", "கண்ணா நலமா", "நான் அவனில்லை" எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. "நான் அவனில்லை" திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்.

தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஜெமினி தயங்கியவர் அல்லர். நடிகர் திலகம் என இறவாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களே இதற்கு சான்று. இவற்றில், ஜெமினியின் நடிப்பும் ஜொலித்தது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.

எம்.ஜி.ஆர் உடன் ஜெமினி கணேசன் "முகராசி" என்ற ஒரே படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார்.

தமக்குப் பின்னர் திரைக்கு வந்த ஜெய்சங்கர், ஏவி.எம்.ராஜன். முத்துராமன் ஆகியோருடனும் அவர் பல படங்களில் இணைந்து நடித்தார்.

சரோஜாதேவி முதன் முறையாக முழுநீளக் கதாநாயகியாக அறிமுகமானது, ஜெமினியை நாயகனாகக் கொண்ட "கல்யாணப்பரிசு". இதன் பின்னரும் இந்த ஜோடி, "ஆடிப்பெருக்கு", "கைராசி", "பனித்திரை" "பணமா பாசமா" போன்ற பல திரைப்படங்களில் வெற்றிக் கொடி நாட்டியது.
அஞ்சலிதேவி ஜெமினி கணேசனுடன் இணைந்த பல படங்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்த மாய மந்திர அடிப்படையிலானவை. "மணாளனே மங்கையின் பாக்கியம்", "கணவனே கண் கண்ட தெய்வம்" ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.



பின்னணிப் பாடகர்களில் மிகப் பெரும் பெயர் பெற்று விளங்கிய டி.எம்.சௌந்தரராஜன் ஜெமினி கணேசனுக்காகச் சில பாடல்கள் பாடியதுண்டு. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" படத்தின் "என்னருமைக் காதலிக்கு", "சதாரம்" படத்தின் "நினைந்து நினைந்து நெஞ்சம்" மற்றும் "ராமு'வில் "கண்ணன் வந்தான்" போன்று அவை புகழ் பெற்றதும் உண்டு. ஆயினும், அவரது திரைக்குரலாகவே அறியப்பட்டவர்கள் இருவர்: முதலாமவர், அவரது ஆரம்பகாலப் படங்களில் பின்னணி அளித்த ஏ. எம். ராஜா. இரண்டாமவர், பன்மொழி வித்தகரான பி. பி. ஸ்ரீநிவாஸ். இயல்பாகவே மென்மையான குரல் கொண்டிருந்த ஜெமினி கணேசனுக்கு இவர்கள் இருவரது குரலும் மிக அற்புதமாகப் பொருந்துவதானது. மனம்போல மாங்கல்யம் திரைப்படத்தில் "மாப்பிள்ளை டோய்" துவங்கிப் பல படங்களில் ஏ.எம்.ராஜா அவருக்குப் பின்னணி பாடினார். "கல்யாணப்பரிசு" திரைப்படத்தில்தான் அவர் முதன் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இதன் பிறகு, "ஆடிப்பெருக்கு" போன்ற சில படங்களில் அவருக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.

அறுபதுகளின் இறுதியில் வெளிவரத்துவங்கிய ஜெமினி கணேசனின் படங்களில், பி.பி.ஸ்ரீனிவாஸ் அவரது பாடற்குரலானார். சுமைதாங்கி போன்ற படங்களில் ஜெமினிக்காக அவர் பாடிய பாடல்கள் இறவா வரம் பெற்றவை.

1970ஆம் வருடங்களின் இறுதியில், "சாந்தி நிலையம்" போன்ற சில படங்களில் அப்போது பெயர் பெறத் துவங்கியிருந்த எஸ்.பி.பி என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜெமினிக்குப் பின்னணி பாடியுள்ளார்

ஸ்ரீதரின் "அவளுக்கென்று ஓர் மனம்" மற்றும் "சாந்தி நிலையம்" ஆகிய படங்கள் வெளியாகும் கால கட்டத்தில் ஒரு நாயகனாக ஜெமினிக்குச் சற்று இறங்கு முகம்தான். அவர் நாயகனாக நடித்த கடைசிப்படம் சுஜாதாவுடன் நடித்து 1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளிவந்த "லலிதா".

சில வருடங்களுக்குப் பிறகு குணசித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்கலானார். அவற்றில் மிகச் சிறப்பாக அமைந்த இரண்டு படங்களுமே கமல்ஹாசன் நாயகனாக நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சிரஞ்சீவியின் தந்தையாக அவர் நடித்த ருத்ரவீணா தமிழில் உன்னால் முடியும் தம்பி என மறுவாக்கம் செய்யப்பட்டபோது, அதில் கமல்ஹாசனின் பிடிவாதம் மிக்க தந்தையாக, கருநாடக இசைத் தூய்மையில் விடாப்பிடி கொண்டவராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மற்றொன்று அவரது கடைசிப் படமான அவ்வை சண்முகி.

சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு இயற்கை எய்தினார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்ட்டது.

இயல்பான நடிப்பினால் நம் மனத்தை  கவர்ந்த அவரது ஆத்மா சாந்தியடைய வாழ்த்துவோம். நன்றி, வணக்கம்!
(சில குறிப்புகள் wikipedia விலிருந்து எடுக்கப்பட்டவை)
தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள்: 7
டி ஆர் பாப்பா. இவரது இயற்பெயர் சிவசங்கரன். சிறுவயதிலிருந்தே வயலினில் சிறந்த பயிற்சி பெற்றவர். தனது ஆரம்ப நாட்களில் மாடர்ன் தியெடர்ஸிலும், ஜூபிடர் பிக்சர்ஸிலும் வயலின் வாசித்து வந்தார். இவரும் திரு டி கே ராமமூர்த்தியும்தான் அந்தக் காலத்தில் அதிக ஊதியம் பெற்ற வயலின் கலைஞர்களாக இருந்தார்கள்.

1946 லிருந்து ஆல் இந்தியா ரேடியோவின் நிலைய வித்வானாக பணியாற்றினார். அக்காலத்தில் திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடன் நிறைய பக்திப் பாடல்களுக்கு இசையமைத்தார். அவற்றில் ஒன்று "சின்னஞ்சிறு பெண்போலே, சித்தாடை உடை உடுத்தி" என்ற பிரபலமான பாடல்.
1952 ல் முதல் முதலில் "ஆத்மசாந்தி" என்ற மலையாளப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை சிட்டாடல் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குனர் ஜோசப் தளியத் இவருக்கு வழங்கினார். பிறகு, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான மல்லிகா, விஜயபுரி வீரன், விளக்கேற்றியவள், இரவும் பகலும், காதல் படுத்தும் பாடு ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.
டி ஆர் பாப்பாவும் டி ஆர் ராமண்ணாவும் வகுப்புத் தோழர்கள். ராமண்ணா அவர்கள் அருணகிரிநாதரை இயக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரு ஜி ராமநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர் திரு டி ஆர் பாப்பாவை மீதியுள்ள பாடல்களுக்கு இசையமைக்கக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து 70 வரையில் இவர்களது கூட்டணியில் பல படங்கள் வந்தன.
தமிழ் இசை சங்கம் இவருக்கு இசைப் பேரறிஞர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
இவரது இசையில் வெளி வந்த சில பிரபல பாடல்களும் அவற்றின் படங்களும்.
எண்ண எண்ண இன்பமே வாழ்வினில் எந்நாளும் - அன்பு;
சமரசம் உலாவும் இடமே - ரம்பையின் காதல்
பகவானே மௌனம் ஏனோ - ரம்பையின் காதல்
வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கே - மல்லிகா
நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் - மல்லிகா
சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் - தாய் மகளுக்கு கட்டிய தாலி
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே - குறவஞ்சி
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் - நல்லவன் வாழ்வான்
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே - எதையும் தாங்கும் இதயம்
முத்தைத்தரு பத்தித்திரு - அருணகிரிநாதர்
ஒண்ணுமே புரியலே உலகத்திலே - குமாரராஜா
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
ஆசை பொங்கும் அழகு ரூபம் - ஆசை
சூடிக் கொடுத்தவள் நான் தோழி - டீச்சரம்மா
தலைவாரிப் பூச்சூடி உன்னை - ரங்கோன் ராதா
இறைவன் என்றொரு கவிஞன் - ஏன்
உள்ளத்திலே உரம் வேண்டுமடா - விஜயபுரி வீரன்
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் - அவசரக் கல்யாணம்.
இவர்கள் தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. இவர்களது இசையில் வந்த பாடல்களை கேட்கும்போது, இவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.